நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் வகையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து 850 ஆக அதிகரிக்க செய்யும் மசோதா, தொகுதி மறுவரையறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், 2023ம் ஆண்டு சட்டத்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் மீதான காரசார விவாதங்கள் நடைபெற்ற பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், மொத்தம் பதிவான 489 வாக்குகளில் மசோதாவுக்கு ஆதரவாக 278, எதிராக 211 வாக்குகள் பதிவானது. மசோதா வெற்றி பெற பதிவான வாக்குகளில் 3ல் 2 பங்கு வாக்குகள் தேவையாகும். மசோதா வெற்றி பெற தேவையான 326 வாக்குகளுக்கு பதிலாக 278 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 20 கூடுதல் நாடாளுமன்ற இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொலைநோக்கற்ற பார்வையால் இழந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 20 எம்.பி. இடங்கள் (சுமார் 50% உயர்வு) கிடைக்கக்கூடிய பொன்னான வாய்ப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கியதாகவும் ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்மூடித்தனமாக அதனை எதிர்த்து, முதிர்ச்சியின்றி செயல்பட்டு, தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைச் சிதைக்கும் வேலையை செய்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
மேலும், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தால், தமிழ்நாட்டுக்கு 9 தொகுதிகள் கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனால், முதல்வரின் தொடர் எதிர்ப்பால், இனி வரும் காலங்களில் 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மறுவரையறை நடைபெறும் சூழல் உருவாகி இருப்பதாகவும் இதனால், தமிழகம் அதன் நாடாளுமன்ற இடங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவில் இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 1998ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர பாடுபட்டதாகவும், இன்று அதே மசோதாவை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து திமுக எதிர்ப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.

