ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த இணை 8.4 ஓவரில் 81 ரன்கள் விளாசியிருந்த நிலையில், 9வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி பந்தில் வைபவ் சூர்யவன்ஷி (28 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 46 ரன்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த துருவ் ஜுரல் 5 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 39 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் கேப்டன் ரியான் பராக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பெரேரா 7, ஜடேஜா 9, ஹெட்மயர் 15, பிஷ்னோய் டக் அவுட்டாகி வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசியில், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிம் செபெர்ட், கேப்டன் அஜிங்கிய ரஹானே இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை தந்தனர். அடுத்து வந்த அங்கிரீஷ் ரகுவன்ஷி 10, கேமரூன் கிரீன் 27, ரோமேன் பொவல் 23, ரமன்தீப் சிங் 10 ரன் எடுத்து வீழ்ந்தனர்.
இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ரிங்கு சிங் (34 பந்து, 2 சிக்சர், 5 பவுண்டரி, 53 ரன்), அனுகுல் ராய் (16 பந்து, 29 ரன்) பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். அவர்கள், 37 பந்துகளில் 76 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், கொல்கத்தா 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, முதல் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

