தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க கடந்த சனிக்கிழமை தமிழகம் வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக இன்று மீண்டும் தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், அனைத்து கலாசாரங்களும் அனைத்து மொழிகளும் சம நிலையில் இருக்க வேண்டும். தமிழைப் போல், கன்னடம், மலையாளம், பஞ்சாபி போன்ற பிற மாநில மொழிகளும் தனித்தன்மை கொண்டவை. தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
தமிழ்நாட்டில் அதிமுக வெற்றுக் கூடாக மாறிவிட்டது. பாஜகவின் கருவியாக அதிமுக மாறிவிட்டது. பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது. டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவது போல், அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துகிறது. மக்களுக்கான திட்டங்களை திமுகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறப்பாக செய்து வருகிறார்கள். வளர்ச்சியில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாகவும் ராகுல் தெரிவித்தார்.

