தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சென்னையில் தீவிரமாக மேற்கொண்டார். மேலும், தவெக தலைவர் விஜய் தாம்பரம், பொன்னேரி, வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
இதனிடையே, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், நேற்று முன்தினம் (ஏப்.17) பெரம்பூர் தொகுதியில் தனது 2ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள தவெக தேர்தல் பணிமனைக்குச் சென்ற விஜய், அங்கு சில வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் 2ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது கே.கே. நகர், காஜாமலை, வயர்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பேரணியாக பிரசாரம் மேற்கொண்டார்.
இதன் போது, தவெக தலைவர் விஜய், புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் திடீரென முழங்காலிட்டபடி சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, கோயில், மசூதி ஆகிய வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடு செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


