சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,360 ஆக விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி சனிக்கிழமை விலையிலேயே விற்கப்பட்டது.
தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான நேற்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில், ஒரு கிராம் ரூ.14,300க்கும், சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. இதன் மூலம், கிராம் வெள்ளி ரூ.275க்கும், கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


