தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2′ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெயிலர் 2’ கடந்த 2023ல் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகிவரும் இப்படத்தில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டுவிட்டதாகவும் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட அவர் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், இன்று படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. குறிப்பாக, சிறப்புத் தோற்றங்களில் வரும் நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஓராண்டுக் காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவினர் அனைவருடனும் ரஜினி கேக் வெட்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடியுள்ளார். `ஜெயிலர் 2′ வெளியீடு ஆகஸ்ட் மாதம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தை முடித்த பிறகு, ரஜினிகாந்த் ஆகஸ்ட் மாதம் கமல்ஹாசன் உடன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இணையவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


