தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், தற்போது சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவதைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுப்பதாகவும் அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் கூறியவர், இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான் எனவும் முக்கிய பதவிகளில் பாஜக தலைவர்களின் வாரிசுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பல பிரச்சினைகள் உள்ளதாக சுட்டி காட்டிய அவர், பாஜகவின் டபுள் இன்ஜினுக்கு எல்லா இடத்திலும் தோல்வியே கிடைத்துள்ளதாகவும் பாஜக ஆட்சியில் முன்னேறிய ஏதாவதொரு மாநிலத்தை காட்ட முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளதாக சாடினார்.
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், திமுக அரசு கல்விக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருவதாகவும் தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியில் மிக திருப்தியாக உள்ளதாகவும் பாராட்டினார்.
திமுகவின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடும் எனவும் மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவே பாஜக முயற்சித்து தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாக பாராட்டிய அவர், கடந்த முறையை விட இந்த தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.


