தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 18ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
மீண்டும் ஏப்.20ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்த ராகுல் கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல், திருநெல்வேலியில் நாங்குநேரி, தூத்துக்குடியில் ஶ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சென்னை திருவான்மியூர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, நிதி தராமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக அரசு தடுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், விடியல் பயணம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் விடியல் பயணம் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.1,000 சேமிப்பதாகவும் கூறினார்.


