தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் தி.நகர், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் எனவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த போது, அனைத்து தொகுதிகளிலும் மக்கள் அமோக ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.
தவெக தலைவர் விஜய், இன்று பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு – ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், பத்து தடவை தோற்றவர், ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார் எனச் சொல்கிறார். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) சேலத்தின் அருகே இருக்கும் தொகுதியில் மட்டுமே பதுங்கிக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் எனும் அச்சத்தில்தான் நமது சின்னத்தையே திருடிவிட்டார் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக தரப்பில் அருண்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனை நடந்த நாளில் அவர் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனுவில் தவறான தகவல்களை கொடுத்திருந்ததே அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் என விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தோல்வி பயத்தினால் அதிமுக அவரை கடத்தியதாக தவெகவினர் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், இன்றைய இறுதி கட்ட பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் அதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் என விமர்சித்துள்ளார்.


