ஐபிஎல் 19வது தொடரின் 31வது லீக் போட்டியில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி ஓப்பனர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களம் கண்டனர். ஒரு புறம் டிராவிஸ் ஹெட் நிதானத்துடன் ஆட, மறுபுறம் அபிஷேக் ஷர்மா டெல்லி அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியாக ரன் குவித்தார்.
இதன் மூலம் அபிஷேக் 25 பந்தில் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 97 ரன்னாக உயர்ந்தபோது டிராவிஸ் 37 ரன்னில் (26 பந்து, 2 போர், 2 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் இஷான் கிசனுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா தனது ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் தொடர்ந்தார்.
அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் ஷர்மா 47 பந்தில் ஐபிஎல்லில் தனது 2வது சதத்தை எட்டி அசத்தினார். மறுபுறம் நன்றாக விளையாடிய இஷான் கிஷன் 25 ரன்னில் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த கிளாசனும், அபிஷேக் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ஜெட் வேகத்தில் ரன் குவித்தனர்.
இதன் விளைவாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது. அபிஷேக் ஷர்மா 68 பந்துகளில், 10 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 135 ரன்கள், கிளாசன் 13 பந்துகளில், 3 பவுண்டரி, 3 சிக்ஸ் உடன் 37 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ராணா 57, ரிஸ்வி 41, ராகுல் 37, ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்தனர்.
சன்ரைசர்ஸ் அணியில் இஷன் மலிங்க 4, ஹர்ஷ் துபே 3, மதுஷங்க, ஹுசேன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


