தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனைப்போட்டி நிலவுகிறது.
இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சென்னையில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்படுவதால், நேற்று மாலை உடன் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
அதன் பின்னர், அமலுக்கு வர உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்த பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்நிலையில், காரைக்குடியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுக்கூட்டத்தில் அவரது பரப்புரையை நிறைவு செய்தார். நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவுபெற்ற நிலையில், அவர் 6 மணியைக் கடந்து 6.05 மணி வரை பரப்புரை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவுசெய்தனர்.


