தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விமானக் கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் நேற்று இரவிலிருந்து விமானம், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊருக்கு செல்லும் நிலையில் இன்று காலை முதல் விமானக் கட்டணம் அதிகரித்திருப்பது கவலை அடைய செய்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழித்தடத்தில், சாதாரண நாட்களில் ரூ.5,354 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், இன்று (ஏப்.22) காலையில் திடீரென ரூ.17,527 ஆக ஏறக்குறைய 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
அதே போல், சென்னை முதல் கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,319 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், இன்று (ஏப்.22) காலையில் திடீரென ரூ.12,027 ஆக ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்துள்ளது.
இது தவிர, சென்னை முதல் மதுரை, வழித்தடத்தில் விமானக் கட்டணம் ரூ.13,320 ஆகவும், சென்னை முதல் திருச்சி வரையிலான வழித்தடத்தில் விமான கட்டணம் ரூ.14,237 ஆகவும் அதிகரித்துள்ளது.
விமான கட்டணம் அதிகரித்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்ல விரும்புவதால், விமான நிறுவனங்கள் தேவை அதிகரிப்பைப் பயன்படுத்தி கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன.
இதனிடையே, பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் முன்கூட்டியே முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சில டிக்கெட்டுகளின் விலை இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பயணிகள் அதிக விலை கொடுத்து பயணிக்க முடியாமல் தவிப்பதாகவும், ரயில் மற்றும் பேருந்து போன்ற மாற்று போக்குவரத்து வசதிகளைத் தேடி அலைவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


