தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் 8,000 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும், அதில் விருப்பப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை மகளிர் விரும்பிய பிராண்டில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை திமுக வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும் வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கோவை தெற்கு , பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், முதல்வர் புகைப்படம், வரிசை எண்ணுடன் கூடிய இல்லத்தரசி திட்ட கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த கூப்பன்களை வழங்க முடியும் எனக் கூறியும், ஆட்சிக்கு வரும் முன்பே கூப்பன்கள் வினியோகிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், வேறு சில தொகுதிகளில் திமுகவினரும் இந்த கூப்பன்களை வினியோகித்து வருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கூப்பன் வினியோகம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


