தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78% மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17சி-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கும் பணி தொடங்கியது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர். தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் தொடர்பான புள்ளி விவரம் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக தெரிந்தாலும் 44 ஆயிரம் பேர் வரை குறைவாக வாக்களித்தது புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. சிறப்பு திருத்தம் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வாக்குகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து வாக்குப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்து இருக்கும் என்று பேசி இருப்போம்.
ஆனால் சிறப்பு திருத்தம் மூலம் பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையில் மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதலாக வாக்குப்பதிவாகி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 ஆண்டுக்குப் பிறகு புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர் இணைவார்கள். அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலிலும் அதே போல் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர்.
இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்வதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தெரிவித்திருந்தீர்கள். தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தொங்கு சட்டமன்றம் அமையும் என்று சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் வாங்குகிற வாக்குகள் சதவீதத்தைப் பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவு வரட்டும் என்று கூறினார்.


