தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா இன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு இயங்கி வந்த கட்சியை, தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என கேசிஆர் பெயர் மாற்றினார்.
இந்நிலையில், கவிதா இன்று ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ (டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். மேடையில் கட்சியின் பெயரை அறிவித்து, கட்சியின் கொடியை கவிதா ஏற்றி வைத்தார். இதன் மூலம், தெலங்கானாவின் இழந்த அடையாளம் மீட்டெடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேட்சல் மாவட்டத்தின் உள்ள அத்வயா கன்வென்ஷன் பகுதியில் நடந்த மாநாட்டிற்கு பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்திருந்தது சிறப்பம்சமாகும்.
மகளிர் அதிகாரம் மற்றும் தெலங்கானாவின் உரிமைகளை மீட்டெடுப்பதே தனது கட்சியின் முதன்மை நோக்கம் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த பிஆர்எஸ் ஆட்சியின் போது கட்டப்பட்ட காலேஸ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், உறவினர்கள் மீதான கேசிஆர் மகளான கவிதாவின் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கட்சி விரோத நடவடிக்கைளுக்காக கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து விலகினார். மேலும், அவரது எம்எல்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இருப்பினும், ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில். தெலங்கானாவின் பிரச்சினைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக கவிதா அறிவித்தார்.
பிஆர்எஸ் கட்சி தொழில்நுட்ப ரீதியாக இயங்கினாலும் அதனுடைய ஆன்மாவையும் சூழலையும் இழந்துவிட்டது. அது தெலங்கானாவின் சாராம்சத்தை இழந்துவிட்டது. இந்த வெற்றிடம்தான் தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியைத் தொடங்கத் தூண்டியதாக கவிதா தெரிவித்தார்.
மேலும், கேசிஆர், இனி நமது மனிதர் அல்ல. மாறாக, அவர் இயந்திரம் போலாகி விட்டார். தன்னைச் சுற்றியுள்ள நரிகளால் அவர் இப்போது ஆட்கொள்ளப்பட்டுள்ளார். டிஆர்எஸ் கட்சியானது பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய 3 பிரதான கட்சிகளையும், 5 முக்கியப் பிரச்சினைகளில் எதிர்த்துப் போராடும். ஆட்சிக்கு வந்தால் அவற்றைச் செயல்படுத்தும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.


