தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை மற்றும் இதர ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும், நாளையும் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணிக்க வசதியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அதே போல், நாளை சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று 19,676 பயணிகளும், நாளை 47,001 பயணிகளும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in அல்லது செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


