ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். சாம்சன் 11 ரன்னில், ரபாடா பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே 22, கார்த்திக் ஷர்மா 12, ஜேமி ஓவர்டன் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் சுருண்டனர்.
கேப்டன் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 74 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை, 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
குஜராத் தரப்பில் ரபாடா 3, அர்ஷத் கான் 2, முகமது சிராஜ், மானவ் சுதார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
இந்த இணை 6.2 ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் அகமது பந்தில் கில் (23 பந்து, 33 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர், சுதர்சன், பட்லர் இணை சேர்ந்து 97 ரன்கள் குவித்த நிலையில், 17வது ஓவரில் 2வது விக்கெட்டாக சுதர்சன் (46 பந்து, 7 சிக்சர், 4 பவுண்டரி, 87 ரன்) அவுட்டானார்.
கடைசியில் 16.4 ஓவரில் குஜராத், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் அமர்க்களமான வெற்றி பெற்றது. பட்லர் 39 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சிஎஸ்கே தரப்பில் ஹுசைன், நூர் அகமத் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். ரபாடா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


