மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி, 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.9 கடைசி நாளாக இருந்தது. வேட்புமனுக்கள் ஏப்.10 அன்று பரிசீலனை செய்யப்பட்டன. மேலும் ஏப்.13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து 2ம் கட்டமாகத் 142 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்தல் அதிகாரிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிகாரி கூறுகையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிபடுத்த, தொகுதி வாரியாகப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவர். தெருக்களின் உட்புறமும், பதற்றமான பகுதிகளிலும் பாதுகாப்பு படை வீரர்களின் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, விரைவான செயல்பாட்டிற்காக,160 பைக்குகளில் தலா இரண்டு மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் எனவும் கள்ள வாக்கு பதிவோ, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவதோ அனுமதிக்கப்படாது என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் குறிப்பிட்டார்.
மேலும், அமைதியான இயல்பான வாக்குபதிவை உறுதி செய்யுமாறும் அதை தடுக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


