தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கருப்பு’.
இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமாகியுள்ள சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி சூர்யா பிறந்த நாளான்று வெளியானது.
இப்படத்தின் முதல் சிங்கிள் ‘காட் மோட்’ கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, 2வது சிங்கிளான `நாங்க நாலு பேரு’ பாடல் கடந்த மாதம் வெளியானது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார்.
அடுத்ததாக, இப்படத்தின் 3வது பாடலாக `ராத்து ராசன்’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 13ம் தேதி வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் நேற்று நடைபெற்ற கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, 32 மாத உழைப்பு, 5 பேர் கொண்ட குழுவின் எழுத்து. இது எல்லாம் சாத்தியமானது சூர்யா சார் ஒருவரால் தான். வெறும் 45 நிமிடம் கதை கேட்டார், உடனே ஓகே சொன்னதாகவும் அவரது மனைவியே நம்பாமல் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்.
வழக்கமாக பெரிய ஹீரோக்கள் எல்லா காட்சிகளிலும் தாங்கள் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இதில் அவர் இல்லாத பல முக்கிய காட்சிகள் இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சூர்யா அதற்கு சம்மதித்ததாகவும் திரையில் அவரது கண்கள் பேசும் வித்தையே தனி. கமர்ஷியல் முதல் பாதி; இரண்டாம் பாதியோ ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பரபரப்பைக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
வலிமை அப்டேட்டிற்குப் பிறகு அதிகமாகக் கேட்கப்பட்டது கருப்பு படத்தின் அப்டேட் தான். இதற்காக முதலில் அடி வாங்கியது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தான். ரசிகர்கள் அவரைத் தான் டார்கெட் செய்தார்கள்.
ஆனால் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து எனக்கு முழு ஆதரவு அளித்தனர். நானும் எஸ்.ஆர். பிரபுவும் நிறைய சண்டையிட்டோம், விவாதித்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு குடும்பமாகிவிட்டோம் எனக் குதூகலமாகக் குறிப்பிட்டார்.
மேலும், போஸ்டரில் ஏன் தேதி போடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். தேதி போட்டால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்துறாங்க. அதான் தள்ளிப்போனது. சீக்கிரம் அதிகாரப்பூர்வமாகப் போடுவோம். ஆனா ஒன்னு.. பட்டாசு எடுத்து வைங்க, பண்டிகை வரப்போகுது. மே 14 படம் ரிலீஸ் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. அதையடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும்சூர்யா 47′ படம் தயாராகி வருகிறது.


