ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் ராகவ் சதா.
இவர், கட்சி அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதாகவும், தனது 15 வருட உழைப்பு வீணானதாகவும், தனிப்பட்ட லாபத்திற்காக கட்சி செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி தலைமைக்கு எதிராக குற்றம்சாட்டி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதை அடுத்து, கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்த ராகவ், பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்பி.க்கள் உள்ளனர். இவர்களில் ராகவ் சதா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி, சுவாதி மலிவால் உள்ளிட்ட 7 பேர் கட்சியை விட்டு விலகினர். இவர்கள் 7 பேரும் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சதா கடந்த 24ம் தேதி பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, முன்னதாக பல தலைவர்கள் எடுக்க அஞ்சிய பல முடிவுகளை எடுத்துள்ளது. 15 ஆண்டுகளாக என் ரத்தத்தால் வளர்த்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி, தன் பாதையை இழந்துவிட்டது. எனவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, மீண்டும் மக்களிடம் திரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு எம்பி.க்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் 7 பேர் இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்திய அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்தின்படியும் மற்றும் 2003ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 91வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படியும், ஒரு கட்சியின் 3ல் இரண்டு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைந்தால், அது கட்சி இணைப்பாக கருதப்படுமே தவிர, கட்சித் தாவலாக கருதப்படாது. அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது.
அதன்படி, 3ல் இரண்டு பங்கு எம்பி.க்கள் பாஜகவுக்கு சென்றதால், அவர்களை பதவி இழக்க செய்ய முடியாது. மேலும், அவர்கள் பாஜகவின் புதிய உறுப்பினர்களாக தொடருவார்கள்.
மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 7 ஆம் ஆத்மி எம்பி.க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், 7 எம்.பி.க்களை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10ல் இருந்து 3ஆக குறைந்துள்ளது.
கட்சி தாவிய 7 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி நேற்று துணைக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


