தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்க்கு, விமானநிலையத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றவர் பட்டு வேட்டி, மேல் துண்டு அணிந்து அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார்.
அப்போது திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற விஜய் முருகன், வள்ளி, தெய்வானை, சண்முகன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை தரிசித்தார்.
இந்த சத்ரு சம்ஹார பூஜையின் போது விஜய், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோயிலிலும் விஜயைக் காண கூட்டம் கூடியிருந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், திருச்செந்தூரில் அதிகாலை தரிசனத்தில் விஜய் பங்கேற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் புறப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று தனி விமான மூலம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
இந்த சத்ரு சம்ஹார பூஜை எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளை அகற்றவும் செய்யப்படும் சக்திவாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. இந்த யாகத்தை நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்ற நம்பிக்கை நிலவுவதால், அரசியல்வாதிகள் பலர் இத்தகைய பூஜைகளை நடத்துவது வழக்கமாகியுள்ளது.
விஜய் மேற்கொண்டுள்ள இந்த பூஜை அவரது அரசியல் பயணத்திற்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.


