தமிழ்நாட்டில் கத்திரி வெயில் அடுத்தவாரம் தொடங்கும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி சதமடித்துள்ளது.
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ’வெப்ப தாக்குதல்’ (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வார்டு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று அதிகபட்சமாக, வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் தலா 105.8 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் 104 டிகிரியும் தாண்டியது.
இது தவிர மதுரை நகர், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, சேலம், கோவை, பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் சென்னையில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், வலிப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பது, வாந்தி போன்றவையே ஹீட் ஸ்ரோக்கின் அறிகுறிகளாகும்.
இதனிடையே, வரும் 30ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் வரும் ஏப்.30 (வியாழக்கிழமை) கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.


