ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ) 2026ம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி (2025ம் ஆண்டிற்கான தரவுகள்) ராணுவத்திற்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025ல் உலகளாவிய ராணுவச் செலவினம் 2,887 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து 11வது ஆண்டாக அதிகரித்துள்ள சாதனை அளவாகும். கடந்த 2024ம் ஆண்டை விட 2025ம் ஆண்டில் ராணுவ செலவினத்துக்கான வளர்ச்சி விகிதம் 2.9% அதிகரித்துள்ளது.
உலகளவிலான ராணுவச் செலவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் 58% பங்கைக் கொண்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 1.68 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இதில், அமெரிக்கா 42% பங்களிப்புடன் உலகிலேயே மிகப் பெரிய ஆயுத விநியோக நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளன.
கடந்த 2025ம் ஆண்டில் 92.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவினத்துடன், ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் உலகின் 5வது பெரிய நாடு அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
கடந்தாண்டை விட இந்தியாவின் ராணுவச் செலவு 8.9% அதிகரித்து, தற்போது 92.1 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ7.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலகளாவிய மொத்த ராணுவச் செலவினத்தில் இந்தியா 3.2% பங்களிப்பை வழங்குகிறது.
ராணுவத்திற்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. இவற்றை தொடர்ந்து, இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியா ராணுவத்திற்காக 9 மடங்கு அதிகமாக செலவு செய்கிறது. நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா உலகளவில் 2வது இடத்தில் உள்ளது.
அதே வேளை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், இந்தியாவின் ஆயுத இறக்குமதி சற்று குறைந்துள்ளது.
2021-2025 கால கட்டத்தில், முந்தைய 5 ஆண்டுகளுடன் (2016-2020) ஒப்பிடுகையில், உலகளாவிய ஆயுத பரிமாற்றங்கள் 9.2% அதிகரித்துள்ளன. இது 2011-2015 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான அதிகரிப்பாகும்.
உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் அவற்றின் ஆயுத இறக்குமதியை 210% அதிகரித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ஈரான் – அமெரிக்கா -இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் போட்டி ஆகியவை ஆயுத இறக்குமதி அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாகும்.


