தமிழகத்தில் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு மையங்களில் இருந்து எடுத்து செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைத்துள்ளனர்.
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 540 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 180 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிசிடிவி கேமரா அமைத்த தனியார் நிறுவனம் சார்பில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும் வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பணியாற்றும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் திருவாரூர் மாவட்டம் பணகுடியை சேர்ந்த யுவராஜ் என்பவரை நியமித்து இருந்தனர். அவருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தற்காலிக ஊழியருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக ஊழியரான யுவராஜ் தேர்தல் பணியின் போது, அதுவும் வாக்கு பதிவு இயந்திரம் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, தனது லேப்டாப்பில் தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை பார்த்துள்ளார். இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக பார்ப்பது குற்றம் என மாநில சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுவராஜ் திரைப்படத்தை பார்த்தது மட்டுமின்றி, அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளார். அந்த காட்சியில் அவர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும், அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக தேர்தல் பணியாளருக்கான அடையாள அட்டை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கண்காணிக்கும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சக தேர்தல் பொறுப்பாளர்கள் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி தடையை மீறி ‘ஜன நாயகன்’ திரைப்படம் பார்த்த மற்றும் சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த தனியார் ஒப்பந்த ஊழியரான யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக நேற்று சிசிடிவி கேமரா அமைத்த தனியார் நிறுவனத்தின் ஊழியரான யுவராஜ் மீது தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வீடியோ பதிவு செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, அவர் தீவிர விஜய் ரசிகர் என்றும், தவெக நிர்வாகியாகவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணியில் இருந்த போது என்னென்ன செய்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்திய அவரது செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்திடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


