தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகின. விடுதலைக்கு பின், தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் தான் 85.15% வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) பணி மூலம், இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் என சுமார் 74 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
கூடுதல் வாக்குப்பதிவு சதவீதத்துக்கு விஜயின் வருகையும் காரணம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய தவெக தலைவர் விஜய், இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று எனக் கூறியிருந்தார்.
தேர்தல் நடந்து முடிந்த உடன் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஓய்வுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால், தவெக தலைவர் விஜய் நேற்றிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றார். அங்கு அவர் சத்ரு சூரசம்ஹார பூஜையில் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், ஏற்கனவே கடந்த 24ம் தேதி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த தவெக தலைவர் விஜய், அடுத்தக் கட்டமாக நாளை மறுநாள் (ஏப்.30) தன் கட்சி சார்பில் போட்டியிட்ட 232 வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தன் கட்சி வேட்பாளர்களை சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.


