ஐபிஎல் 19வது தொடரின் 40வது லீக் போட்டி நேற்று சண்டிகர் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கி அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ரன்கள் 37 ஆக இருந்தபோது பிரியான்ஷ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கூப்பர் கனோலி அவரது பங்கிற்கு 30 ரன்கள் சேர்த்த போது அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யருடன் இணை சேர்ந்த பிரப்சிம்ரன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து அரை சதம் அடித்த நிலையில் 59 ரன்கள் (44 பந்து, 6 போர், 1 சிக்ஸ்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்ரேயஸ் அய்யரும் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசியில் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடி அரை சதத்தை கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் (22 பந்து, 4 போர், 6 சிக்ஸ்) எடுத்திருந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் 2 விக்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், பர்கர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி களமிறங்கி வழக்கமான அதிரடி ஆட்டம் ஆடினர். சூர்யவன்ஷி 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஜெய்ஸ்வால் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.
இதையடுத்து விளையாடிய ஜுரல் 19, ரியான் பராக் 29 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பெரேரா 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள், ஷூபம் தூபே 12 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
கடைசியில் ராஜஸ்தான் ராயல் 19.2 ஓவரில் 228 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது.


