மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.9 கடைசி நாளாக இருந்தது. வேட்புமனுக்கள் ஏப்.10 அன்று பரிசீலனை செய்யப்பட்டன. மேலும் ஏப்.13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது.
இந்த 2ம் கட்ட தேர்தலில் 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மே.வங்கத்தில் 2ம் கட்டமாக இன்று முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் உள்ளிட்ட 142 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் மற்றும் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையேயான கலவரத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்காக தேர்தல் பார்வையாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


