அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தொடுக்கும் தாக்குதலினால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இதனிடையே அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தானில் நடந்த முதல் கட்ட சமரச முயற்சியினால் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
ஆனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.
அதிலும் குறிப்பாக, 5 மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 12 வருடங்களாக, நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல் வரை உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை தேர்தலுக்கு பின் உயருவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடையும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வின் போதும் இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கால நிம்மதி முடிந்தது. விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ புறப்பட்டுவிட்டது. ஏப்.29ம் தேதிக்குப் பிறகு கவனித்துப் பாருங்கள் – பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயரும்.
எண்ணெய் விலை மலிவாக இருந்தபோது, லாபத்தை தன் பையிலேயே வைத்துக் கொண்ட மோடி அரசு, தற்போது விலை உயர்ந்திருக்கும் நிலையில், அந்த பாரத்தை மக்கள் மீது சுமத்தப் போகிறது. மலிவான காலத்தில் மக்களைச் சுரண்டிவிட்டு, விலைவாசி உயர்வு வரும்போது மக்களைத் தவிக்கவிடும் அரசு இது என்று கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
எல்பிஜி, பெட்ரோலியம் மற்றும் டீசல் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன. விலைகளும் உயரவில்லை. எனவே பீதியடைய வேண்டாம். எண்ணெய் தட்டுப்பாடு என மக்கள் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்ப்பதாகவும், எண்ணெய் பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.


