மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.
இதனையொட்டி அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் வெப்பத்தாக்கத்தினால் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி பகுதியில் நேரடி வெப்பத்தாக்க பாதிப்புகள் ஏதும் புதிதாக பதிவாகவில்லை என்றாலும், வெப்பம் சார்ந்த இதர உடல்நலக் குறைபாடுகளால் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 3.34 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிர சுகாதாரத் துறை, வெப்பத்தாக்க நோயாளிகளுக்கென தனி படுக்கைகள், போதுமான அளவு ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளுடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கும்படியும், தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.


