காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு வரும் மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினையின்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தலைவர், செயலாளர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப் பட்டது.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இது, காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்துகிறது. இது நீர் பற்றாக்குறை காலங்களில், நீர் பகிர்வு மற்றும் நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (சிடபிள்யூஆர்சி) பரிந்துரைகளின்படி செயல்படுகிறது.
அப்போது முதல் தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. அந்த வகையில் மேலாண்மை ஆணையம் இதுவரை 49 முறை கூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு வரும் மே மாதம் 2.5 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


