சித்ரா பவுர்ணமி நேரம் நாளை (வியாழக்கிழமை) இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 11.07 மணி வரையிலாகும். இந்த நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு அதிகளவில் பக்தர்கள் திரளக் கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நோக்கி பக்தர்கள் அதிக அளவில் பயணம் செய்ய உள்ளதால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு சேவைகளை அறிவித்துள்ளன.
அதன்படி, நாளை முதல் (ஏப்.30) முதல் மே 2 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் அடையார் பேருந்து நிலையம் வழியாகவும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையம் மூலமும் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 40 சிறப்பு பேருந்துகள் நாளை மறுநாள் (மே 1) இயக்கப்படுகின்றன.
சென்னை தவிர மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் நேரடி பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் நெரிசலை தவிர்க்க, தமிழ்நாடு அரசின் மாநில போக்குவரத்து கழக ஆன்லைன் புக்கிங் போர்ட்டல் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கிளம்பாக்கம் முனையம் மூலம் நாளை (ஏப்.30) 548, நாளை மறுநாள் (மே 1) 565 மற்றும் மே 2ம் தேதி 35 பேருந்துகள் என மொத்தம் 1,148 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


