தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதனிடையே, திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரை சென்ற விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றார். அங்கு அவர் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனம், சத்ரு சம்ஹார பூஜையில் பங்கேற்றார்.
தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளார்களுடன் நாளை பனையூரில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விஜய் இன்று மகாராஷ்டிர மாநிலம் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் மகாராஷ்டிரா சென்றார்.
விஜய்யுடன் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்தும் சீரடி சென்றார். தரிசனம் முடிந்ததும் இன்று மாலை விஜய் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
அடுத்து வரும் நாட்களிலும் விஜய் பிரசித்தி பெற்ற மேலும் சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனிப்பட்ட பிரச்சினைகள், தேர்தல் முடிவு உள்ளிட்ட காரணங்களுக்காக ஜோதிடரின் அறிவுரையின் பெயரில் தொடர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
விஜய்யின் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.


