இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று 1000 புள்ளிகள் சரிந்து கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்திருப்பது, இதனால் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிரடியாக உயர்ந்திருப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளிலிருந்து வெளியே எடுத்து செல்வதும் மற்றொரு முக்கிய காரணமாகும். இதனால், இந்திய சந்தையில் பணப் பரிவர்த்தனை குறைவதால், விற்பனை அழுத்தம் அதிகரித்து, பங்குகள் தொடர்ந்து சரிவை சந்திக்கின்றன.
இதனிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 111 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து வர்த்தகமாகிறது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் சரிவுடன் தொடங்கியது. காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 994 புள்ளிகள் சரிந்து 75,508 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,863 புள்ளிகளில் வர்த்தகமானது.


