தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதனிடையே, திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை சென்ற விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றார். அங்கு அவர் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனம், சத்ரு சம்ஹார பூஜையில் பங்கேற்றார்.
இதையடுத்து தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளார்களுடன் இன்று பனையூரில் ஆலோசனை நடத்த திட்டமிட்ட நிலையில், விஜய் நேற்று மகாராஷ்டிர மாநிலம் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற அவர் சென்னை திரும்பினார்.
விஜய்யின் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களிலும் அவர் பிரசித்தி பெற்ற மேலும் சில கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெக வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் போது, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் பின்பற்ற வேண்டிய, செயல்பட வேண்டிய வழிமுறைகள், எவ்வாறு கவனமாக இருப்பது, பிற கட்சியினரை எவ்வாறு கையாளுவது என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


