தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதனிடையே, கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்று முருகன் கோயிலில் நடந்த விஸ்வரூப தரிசனம், சத்ரு சம்ஹார பூஜையில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து, ஏப்.29ம் தேதி விஜய் மகாராஷ்டிர மாநிலம் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, அடுத்து வரும் நாட்களிலும் விஜய் பிரசித்தி பெற்ற மேலும் சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கும், நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் விஜய் நாளை (மே 2) செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘வேளாங்கண்ணி பேராலயம், நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் விஜய் வழிபாடு நடத்த இருக்கிறார். தலைவர் விஜயின் பயணம் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது. ஆனால் அவரது பயணத் திட்டம், நேரம் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை’’ என்றனர்.
அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனிப்பட்ட பிரச்சினைகள், தேர்தல் முடிவு உள்ளிட்ட காரணங்களுக்காக ஜோதிடரின் அறிவுரையின் பெயரில் தொடர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
விஜய்யின் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.


