மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அருகிலுள்ள அழகர்மலையில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாள், பக்தர்களால் அன்புடன் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் மதுரைக்கு எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் தருணம் சித்திரை திருவிழாவின் வைபவத்தின் உச்சகட்ட நிகழ்வாகும்.
இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏப்.26ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், ஏப்.28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், ஏப்.29ம் தேதியன்று திருத்தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏப்.29ம் தேதியன்று கள்ளழகர் மதுரை புறப்பட்டார். வழி நெடுகிலும், பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மதுரையை வந்தடைந்தார்.
மதுரை வந்த கள்ளழகருக்கு ஏப்.30ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடேஷ பெருமாள் கோவிலில் மாலையில் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமி நாளான இன்று, பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் தங்க ஆபரணங்கள், மலர் அலங்காரங்களுடன் தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டு, ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் காலை 05.59 மணிக்கு கள்ளழகர் இறங்கினார்.
கள்ளழகர் வேடமிட்ட பலரும், கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமானோர் சொம்பில் சர்க்கரை தீபம் ஏற்றி கள்ளழகரை தரிசித்தனர்.
கள்ளழகரைக் காண தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து இருந்தும் குவிந்த சுமார் 10 லட்சம் பக்தர்களால் மதுரை திருவிழாக்கோலம் பூண்டது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் விழாவாகும்.
இதைத் தொடர்ந்து தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் உற்சவம் நடைபெறும்.
மதுரையில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், மே 5ம் தேதி தசாவதாரம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மே 6ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவார்.


