சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலலினால், தனியார் நிறுவனங்கள் அவற்றின் பிரீமியம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன.
அதே போல், வீட்டு உபயோக எரிபொருள் சிலிண்டர் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. வர்த்தக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாத போதும் அதன் வினியோகத்தில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது.
கடந்த ஏப்.1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை அதிரடியாக ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, ஓட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்தது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10, பரோட்டா விலையில் ரூ.5 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
அதன்படி, வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 990 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து தற்போது 3,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியான வர்த்தக சிலிண்டரின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதன் தாக்கமாக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரக்கூடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


