வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த மாத தொடக்கத்தில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
அதன்படி, வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 990 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து தற்போது 3,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதள பதிவில், தேர்தலுக்கு முன்பு கணித்தது போலவே, தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போரை என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த எல்பிஜி கேஸ் விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


