ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடியது. இதன் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (6 ரன்), வைபவ் சூர்யவன்ஷி (4 ரன்) முதல் இரு ஓவர்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய துருவ் ஜுரெல், கேப்டன் ரியான் பராக் இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். இந்த இணை 102 ரன்கள் விளாசிய நிலையில், 3வது விக்கெட்டாக துருவ் ஜுரெல் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களத்திற்கு வந்த ரவீந்திர ஜடேஜா 20 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரை அடுத்து, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரியான் பராக் (50 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி, 90 ரன்) மிட்செல் ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார்.
கடைசி கட்டத்தில் டொனொவன் பெரேரா, ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது.
டெல்லி அணி தரப்பில் ஸ்டார்க் 3, ஜேமிசன், படேல், நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்கார்களான நிசாங்க 62, கே.எல்.ராகுல் 75 ரன்களில் அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 33 ரன்கள், அஷுதோஷ் ஷர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
கடைசியில் டெல்லி அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 226 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆர்ச்சர், தேஷ்பாண்டே, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


