தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, இந்தியாவில் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘செல்பேசி ஒலிபரப்பு எச்சரிக்கை’ (செல் பிராட்காஸ்ட் அலர்ட்) என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு செல்பேசி ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது எஸ்எம்எஸ் போலன்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் உடனடி எச்சரிக்கைகளை வினாடிகளில் அனுப்ப அனுமதிக்கிறது.
நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் கேஸ் கசிவு போன்ற அவசர காலங்களில், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரடி எச்சரிக்கை அனுப்ப இது பயன்படும்.
இன்று (மே 2) அன்று, நாடு தழுவிய அளவில் இந்த சோதனை எச்சரிக்கைகள் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டன.
இந்த செய்திகள் பொதுவாக “அவசர எச்சரிக்கை: மிகத் தீவிரம்” (எமர்ஜென்சி அலர்ட்: சிவியர்) என்ற தலைப்பில், தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (சி-டிஓடி) மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலம் வந்து சேருகின்றன.
இது ஒரு சோதனையாக இருப்பதால், மொபைலில் இத்தகைய எச்சரிக்கைச் செய்தி வந்தால் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பேரிடர் தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் பொதுமக்களை விரைவாகவும் திறமையாகவும் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் அது குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


