தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த மே.வங்கம், அசாம், கேரளாவிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் 3,300க்கும் மேற்பட்ட மேஜைகள் தயார் நிலையில் உள்ளன.
சுமார் 10,000 பணியாளர்கள் மற்றும் 4,600க்கும் மேற்பட்ட நுண் பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மையங்களுக்குள் செல்வதற்கு முதன்முறையாக ‘க்யூஆர் குறியீடு’ கொண்ட புகைப்பட அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்று நேரத்திற்கு பிறகு, காலை 10 மணி நிலவரப்படி, தவெக 100 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் இல்லம் செல்லும் வழியில் கபாலீஸ்வரர் நகரில் காவல்துறை வாகனங்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளது. கபாலீஸ்வரர் நகர் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய் வெளியே செல்லும் போது அவரது வாகனத்தை பின் தொடர கூடாது. மீறினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். ரசிகர்கள் அதிக அளவில் கூடக் கூடாது. இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்கரை முதல் நீலாங்கரை வரை 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


