தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்தன.
இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
பொதுத் தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாகவும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 6ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நடந்து முடிந்தன. விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் நிலையில், புதிய அரசு ஆட்சி அமைப்பதில் தாமதம் மற்றும் ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய அரசு ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, தேர்வு முடிவுகள் வெளியாகும் புதிய தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் tnresults.nic.in அல்லது dge.tn.gov.in ஆகிய இணையதளங்களைப் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


