நடந்து முடிந்த தேர்தலில், தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய திராவிட கட்சிகளை தனது 2 வருட அரசியல் வருகையால் திணறடித்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர முடியாதபடி அதிமுக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, தவெகவினருடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், அறுதி பெரும்பான்மை இல்லாத தவெக தரப்பில் இருந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க அதிமுகவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய தவெக நிர்வாகி நிர்மல் குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்ததாக வெளியான தகவல் தவறு. என்டிஏ கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் தவெக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது நடந்து முடிந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்பது தவறான செய்தி எனவும் தவெக ஆதரவு குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக இபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக மிகப் பெரிய இயக்கம், எந்த சூழலிலும் தவெகவை ஆதரிக்காது என்றும் உறுதிபட தெரிவித்தார்.


