ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும், தொடக்கம் முதல் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதனால், 3.2 ஓவரில் சன்சைர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது. லாக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் ஷர்மா (13 பந்து, 35 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹெட் (19 பந்து, 38 ரன்), யுஸ்வேந்திர சஹல் பந்தில் அவுட்டானார்.
அதன் பின், இஷான் கிஷன், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து ரன் வேட்டை நடத்தினர். இந்த இணை 48 பந்துகளில் 88 ரன்கள் விளாசிய நிலையில், 3வது விக்கெட்டாக, 15வது ஓவரில் இஷான் கிஷன் (32 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி, 55 ரன்), அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், கிளாசனுடன் நிதிஷ் குமார் ரெட்டி இணை சேர்ந்தார். 17.1 ஓவரில் சன்ரைசர்ஸ், 200 ரன்களை எட்டியது. அதே ஓவரில் கிளாசன் அரை சதம் தொட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த இணை பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்தது. கடைசி பந்தில் கிளாசன் (43 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 69 ரன்) அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ், 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் விளாசியது. அந்த அணியின் நிதிஷ் குமார் 13 பந்தில் 29 ரன்னுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், பெர்குசன், சஹல், விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 236 ரன்கள் என்ற இமலாய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கூப்பர் கனாலி 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டோய்னிஸ் 28, சூர்யன்ஷ் 25 ரன்கள் எடுத்தனர்.
கடைசியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம், ஐதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷிவாங் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் மலிங்கா, சாஹிப் ஹுசேன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.


