நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் மாநில அரசியல் களம் எதிர்பார்த்ததை விட மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க தேவையான 6 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் தவெக திணறுகிறது.
இந்த சூழலில் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அதிமுக, திமுக கட்சிகள் என சேர்த்து பதில் கூற முற்படும் போது இடையே குறுக்கிட்ட செய்தியாளர் சார்ந்திருக்கும் கட்சியின் பெயரை மட்டும் கூறாமல், எதிரி கட்சியாக இருக்கும் திமுகவின் பெயரையும் சேர்த்து சொல்கிறீர்களே என மறுவினா தொடுத்தார்.
உடனே கோபப்பட்ட அன்பழகன் என்ன கேள்வி இது? திமுகவும் பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சி தானே. 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் கட்சி தானே திமுக. அந்த கட்சியை காரணமே இல்லாமல் கேவலப்படுத்தியா இப்போது பேச முடியும், அது தன்னால் முடியாது எனக் கோபமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு கூட தங்கள் கட்சி தலைவர் எடப்பாடியார் உள்ளபடியே மிகவும் வருந்தினார். இது உண்மை, நான் அவரை நேரில் பார்க்கும் போது நம் கட்சி நிலை தேர்தலில் இப்படியாகிவிட்டதே, மனதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது என்றேன்.
அதற்கு விடுங்கள் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார். ஸ்டாலின் எல்லாம் எப்பேர்ப்பட்ட லீடர், அவரே வெற்றி வாய்ப்பை இழக்கும் அளவிற்கு மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்றால் என்ன இது? இந்த மக்கள் என்ன தான் நினைக்கிறார்கள் என்று கேட்டு மனதார வருந்தினார். அரசியல் ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், நீண்ட கால அனுபவமுள்ள ஒரு தலைவர் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என்று இபிஎஸ் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அரசியலில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் மிகச் சிறந்த மற்றும் பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். அவர்களுக்கு இந்த நிலை வரக் கூடாது என்று இபிஎஸ் வருந்தி பேசினார். இப்படிப்பட்ட தலைமைப் பண்பு உள்ளவர் தான் எங்கள் தலைவர் எடப்பாடியார் என்று அன்பழகன் கூறினார்.


