நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து அதற்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேர்தல் பரப்புரையின் போதும் காங்கிரஸ் மூத்த தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மேடையேறவில்லை. தமிழகத்துக்கு இரண்டு முறை வந்தும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான போதிய ஆதரவு இல்லாத தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவளிப்பதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 11 ஆண்டு காலமாக நீடித்து வந்த திமுக-காங். கூட்டணி முறிவடைந்தது.
இதனையொட்டி, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் அதிரடி மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் சத்தியமூர்த்தி பவனில் தென்படத் தொடங்கியுள்ளன.
தற்போதைய மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தாமாகவே முன்வந்து விலகிக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.
தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 எம்எல்ஏக்கள் குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் கட்சி தலைமை மாற்றம் தொடர்பாக பரவலாக பேச்சு எழ தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள விஜய் வசந்த் எம்.பி.யின் பெயர் மாநிலத் தலைவர் பதவிக்கு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் அரசியல் வாரிசாக களம் இறங்கிய விஜய் வசந்த், தந்தையை போலவே தொண்டர்களுடன் எளிமையாகப் பழகும் பண்பும், கன்னியாகுமரி போன்ற ஒரு முக்கியமான கோட்டையை தனது வசமே தக்கவைத்து கொண்ட திறமையும் கொண்டவர்.
கடந்த 2021 இடைத்தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என இரண்டு முறை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனது அரசியல் ஆளுமையை அவர் மேலிடத்திற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார். ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் விஜய் வசந்த், தமிழகத்தில் இளைஞர்களை கவர்ந்து கட்சியை பலப்படுத்த சரியான தேர்வாக இருப்பார் என டெல்லி தலைமை கருதுகிறது.
மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே வலுவான வாக்கு வங்கியாக திகழும் தென் மாவட்டங்கள், குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்குவதன் மூலம், வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் எழுச்சியுடன் செயல்பட முடியும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
செல்வபெருந்தகை ஏற்கனவே தனது விலகல் குறித்த எண்ணத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பதால், புதிய தலைவரை நியமிப்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு எந்தச் சிக்கலும் இருக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது.
விஜய் வசந்தின் துடிப்பான செயல்பாடு இணையும் போது கட்சி இன்னும் வலுப்பெறும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் விஜய் வசந்தின் பெயரே பிரதானமாக உள்ளது.


