நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அறுதி பெரும்பான்மையை எட்டாததால் தொங்கு சட்டசபையே அமையும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக ஆதரவுகோரியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டும் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் முதல்வராக பதவியேற்க ஆளுநரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், அவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் ஆளுநர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரங்களில் விஜய்க்கு எதிராக பரப்புரை செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்த போதும் ஆளுநர் அர்லேகர் இழுத்தடிப்பது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அரசமைப்புக்கு முரணானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.


