நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அக்கட்சிஆட்சியமைப்பதற்கு தேவையான அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, வெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த சூழலில், விஜயின் தவெக கட்சிக்கு இன்னும் 6 இடங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான நிலையில், விசிக மற்றும் இடதுசாரிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் ஆதரவு கோரியது தொடர்பாக விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அரசமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு பாஜக முயற்சிக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருவதோ, மறு தேர்தல் நடத்துவதோ தேவையில்லாதது என்று தெரிவித்தார்.
மேலும், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் ஆத்திரத்தில் பாஜக இவ்வாறு செய்வதாக நினைப்பதாகவும் காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் கரூர் விவகாரத்தில் விஜயை நெருக்க பாஜக திட்டமிடுவதாகவும் கூறினார்.
ஏதோ ஒரு வகையில் பாஜகவின் நெருக்கடிக்கு விஜய் ஆளாவது போல் தெரிவதாகவும் இடதுசாரிகள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதைப் பொறுத்து விசிகவின் முடிவும் அமையும் எனவும் கூறினார்.


