தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ள நிலையில், திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனிடையே, திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசிக 2, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 என மொத்தம் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தவெகவுக்கு ஆதரவளிப்பது பற்றி கட்சியினருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் இன்று திடீரென சந்தித்து பேசினர்.
தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டது குறித்து மு.க.ஸ்டாலினுடன் இந்த 3 தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவரது கோரிக்கையை ஆளுநர் ஏற்காதது குறித்தும் சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


