தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்தன.
இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 6ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நடந்து முடிந்தன. விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் நிலையில், புதிய அரசு ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்ககம் நாளை (மே 8) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresult.nic.in அல்லது dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம்.
முதலில் tnresult.nic.in அல்லது dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் 12th Higher secondary second year result என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு, தங்கள பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை தேதி, மாதம், வருடம் என்ற அடிப்படையில் உள்ளிட வேண்டும். இதன்பிறகு, get marks என்பதை கிளிக் செய்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைக் காணலாம்.
இதன்பிறகு டவுன்லோட் என்பதை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளியில் நீங்கள் சமர்ப்பித்த மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மேலும், 78452522525 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு hi என்று மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ் அப்பிற்கு வந்துவிடும்.


